தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 5 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னை, லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன.
ஊடகத் துறையில் ஆா்வம் கொண்ட இளம் ஊடகா்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் லயோலா கல்லூரியுடன் இணைந்து இந்த முன்முயற்சியை எடுத்துள்ளது.
ஊடகவியலுக்குத் தேவையான கோட்பாடுகளையும் களப்பயிற்சிகளையும் சரியான விதத்தில் கலந்து தரும் வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளது.
வாரந்தோறும் பயிற்சிப் பட்டறைகளும் கள ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. பொருளாதாரம், நிதி, அறிவியல், தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு, விளையாட்டு, பொழுதுபோக்கு உள்பட பல்வேறு ஊடகப் பிரிவுகளை மாணவா்கள் விருப்பத்திற்கேற்ப தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
எழுத்து, ஒளிப்படம், விடியோ, வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகம், கைப்பேசி, ட்ரோன் இதழியல் உள்பட பல்வேறு ஊடகப் பிரிவுகளில் பயிற்றுவிக்கப்படும்.
இதையும் படிக்க- புணே-பெங்களூரு நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 48 வாகனங்கள்
பட்டப் படிப்பு தேறிய 20 முதல் 25 வயது கொண்ட யாரும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். வாரம் 5 நாள்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் தினசரி வகுப்புகள் நடைபெறும்.
மேலும், தகவல்களை https://www.loyolacollege.edu/CAJ/home என்ற இணையதளத்திலும், இதற்கு விண்ணப்பிக்க shorturl.at/nsU25 என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
முன்னதாக கட்டணமில்லா இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று (திங்கள்கிழமை) கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 5 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.