சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 18,158 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
அதன்படி, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனி வாஸ் உத்தரவின் பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் பயணச் சீட்டு பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையினர் அடங்கிய குழுவினர், ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் நடத்திய சோதனையில், டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்கள், பொது பெட்டி டிக்கெட்டை வைத்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தவர்கள், அதிக பார்சல் கொண்டு வந்தவர்கள் உள்பட 18 ஆயிரத்து 158 பேர் சிக்கினர். இவர்கள் மீது, ரயில்வே சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.1.41 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதையும் படிக்க | ரூ.100 கட்டணத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் விருப்பம் போல் பயணம்!
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட முதுநிலை மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், 'சேலம் ரயில்வே கோட்டத்தில், கடந்த மாதம் நடத்திய சோதனையில், டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களி டம் இருந்து ரூ.1.41 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது தண்டனைக்குரியது. அவர்களிடமிருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதுடன் ஓராண்டு வரை சிறை தண்டனையும் விதிக் கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.