சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மனமுடைந்த தந்தை மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தலைமறைவான குற்றவாளியை பிடிக்க ரயில்வே காவல் துறையினர் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் என 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (22). அதேப் பகுதியைச் சேர்ந்த சத்யா (20) இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கம் போல இருவரும் இன்று பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மாணவி சத்யாவை, சதீஷ் ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டுள்ளார். இதில், ரயிலில் இருந்து விழுந்த சத்தியா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையும் படிக்க | ‘ரோபோடிக் நுட்பத்தில் 99 சதவீத துல்லிய சிகிச்சை சாத்தியம்’
இது குறித்து சத்யாவின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சதீஷ் என்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் தலைமைக் காவலராக பணியாற்றி வருவதும், கொலையாளி சதிஷ் ஓய்வு பெற்ற காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து சத்யா தந்தை மாணிக்கத்திடம் விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், மகள் சத்யா கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த தந்தை மாணிக்கத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
மகள் சத்யாவின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தந்தை மாணிக்கம் உடலும் வைக்கப்பட்டுள்ளது.
சத்யா மட்டுமின்றி, அவரின் தந்தையும் இழந்ததில் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இளம்பெண் சத்யாவை கொலை செய்ததாக சொல்லப்படும் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.