மேட்டூர்: காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 1,05,000 கன அடியாக நீடிக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும், கேரளம் மாநிலம் வயநாட்டிலும் கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் அணையின் பாதுகாப்பு கருதி காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அணைகளில் உபரி நீர் வரத்து காரணமாகவும் காவிரியின் உபநதிகளின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | செய்யாறு அருகே விஜய நகர பேரரசு காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு
இதனால் வியாழக்கிழமை மாலை முதல் மேட்டூர் அணைக்கு ஒரு நீரின் அளவு வினாடிக்கு 1,05,000 கன அடியாக நீடித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,05,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,05,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21,500 கன அடி வீதமும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 83,500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் மேட்டூர் அணையில் இருகரைகளிலும் நீர்வளத் துறையினர் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ளை கட்டுப்பாட்டு அறையில் பொறியாளர் தலைமையில் பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.