புது தில்லி: சுமார் 5,000 வாகனங்கள் திருட்டு மற்றும் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வழங்கும் குற்றச்சாட்டில் மூளையாக செயல்பட்டவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் அனில் சௌஹான் என்பதும் அவர் அசாம் அரசின் பொதுப் பணிகளை எடுத்துச் செய்து வந்த முதல்நிலை ஒப்பந்ததாரராக இருந்ததும் தெரிய வந்துள்ளது.
அண்மையில் தில்லியில் சட்டவிரோத ஆயுதங்கள் விற்பனை அதிகரித்திருந்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முக்கிய புலனாய்வு தகவல்களை மட்டும் அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட சிறப்பு விசாரணையில் இந்த நபரை கைது செய்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவரிடமிருந்து கைத்துப்பாக்கி, திருடிய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவர் மீது 180 குற்ற வழக்குகள் இருப்பதும், ஏற்கனவே 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 1997ஆம் ஆண்டு முதல் இவர் சுமார் 5,000 வாகனங்களைத் திருடியிருப்பதும் ஏராளமானமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.