மணப்பாறையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயை, சக்கர நாற்காலியில் வைத்து 4 கி.மீ தொலைவில் உள்ள இடுகாடு வரை மகன் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியாய் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் வசித்து வந்தவர் பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி. 74 வயதாகும் மூதாட்டி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கை, கால்கள் செயலிழந்து பாதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் படுத்தப்படுக்கையாக இருந்த மூதாட்டி தோல் நோயால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது மகன் முருகானந்தம் பராமரிப்பில் இருந்து வந்த மூதாட்டி நேற்று காலை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.
அதனைத்தொடர்ந்து தோல் நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்ய யாரும் வரமாட்டார்கள் எனக் கருதிய மகன் தனது இல்லத்தில் இருந்து சக்கர நாற்காலியில் உயிரிழந்த தாயை அமர வைத்து செவலூர் பகுதியில் இருக்கும் நகராட்சி இடுகாடு வரை 4 கி.மீ. தொலைவிற்கு தள்ளிச் சென்று எரியூட்டியுள்ளார்.
வீட்டிற்கு சற்றுத் தொலைவில் மாவட்ட தலைமை மருத்துவமனை இருந்தும் உயிரிழந்த உடல் சக்கர நாற்காலில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.