கம்பம்: தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலைக்கு சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மாலை அணிவித்தார்.
செப்.10-ல் லண்டன் கேம்பர்லி நகரில் உள்ள பூங்காவில் முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு தமிழக அரசு உருவச் சிலை திறக்க முடிவு செய்தது. இதற்காக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் என்.ராமகிருஷ்ணன், ஏ.மகாராஜன், எஸ்.சரவணக்குமார் ஆகியோர் சென்றனர்.
ஆனால் இங்கிலாந்து நாட்டு அரசி எலிசபெத் டெய்லர் காலமானதை முன்னிட்டு அங்கு அனைத்து நிகழ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது.
ஆனால் அதே நேரத்தில் தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்கப் போவதாக நிகழ்வு அறிவிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் மாலை அணிவித்தார். இதுபற்றி அவரிடம் கேட்ட போது, 5 மாவட்ட மக்களுக்கு குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கிற்கு மாலை அணிவித்தாக தெரிவித்தார். இளஞ்செழியன் என்ற கலைஞர் தர்பூசணி பழத்தில் பென்னிகுயிக் உருவத்தை செதுக்கி ஆட்சியரிடம் நினைவு பரிசாக வழங்கினார்.
இது பற்றி விவசாய சங்கங்கள் தங்களுக்கு எவ்வித தகவலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வரவில்லை, தெரிந்திருந்தால் நாங்களும் பங்கேற்றிருப்போம் என்று ஏமாற்றத்துடன் தெரிவித்தனர்.