புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவைப் பார்க்க வேண்டும் என்ற நீண்டகால ஆசையை நிறைவேற்றியுள்ளார் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர்.
புத்தகங்களின் மீதும் வாசிப்பின் மீதும் ஆழமான காதலைக் கொண்ட அந்த பெண், அப்பெண்ணின் பெயர் சுகுணா பன்னீர்செல்வம். 38 வயது. எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார்.
கந்தர்வகோட்டை வட்டத்தைச் சேர்ந்த கொத்தம்பட்டி அவரின் ஊர். பெற்றோர் விவசாயிகள். பிறவி மாற்றுத்திறனாளி. இவரது தங்கை சுகந்தியும் இவரைப் போலவே!
ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்கும் மேலாக படுத்தபடுக்கையாகிப் போன சுகுணா, வீட்டை விட்டு வெகுதொலைவு வந்து- பெருங்கூட்டத்தைக் கண்டது இன்று தான்!
புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவைப் பார்க்க வேண்டும் என்ற அவரது ஆசையைப் பூர்த்தி செய்திருக்கிறார்கள் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள்.
டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஆம்புலன்ஸ், ஸ்ட்ரெக்சர், உதவியாளர் சகிதம் செவ்வாய்க்கிழமை பகலில் வந்து அரங்குகளைப் பார்வையிட்டு, 50-க்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிச் சென்றது மட்டுமல்லாமல், இங்கிருந்த மாவட்ட சிறைக்கான நூல் தானம் செய்யும் அரங்குக்கு இரு புத்தகங்களைக் கொடுத்துச் சென்றார்!
அறுசுவை விருந்துதான் புத்தகத் திருவிழா எனக் கூறும் சுகுணா, நிறைய படிப்பவரும், கைப்பேசி மூலம் கவிதைகளை எழுதுபவரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.