புதுக்கோட்டை, விராலிமலை அரசு மருத்துவமனையில் குடிநீர்த் தொட்டிக்குள் 2 குரங்குகள் செத்து மிதந்ததால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விராலிமலை அரசு மருத்துவமனையில் தினமும் சுற்றுப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் வெளி நோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் தினசரி வந்து சிகிச்சை பெற்று வருகின்றன. இந்த நிலையில் இங்கு இருக்கும் குடிநீர்த் தொட்டிக்குள் கடந்த இரண்டு நாள்களாக மூடி இல்லாத குடிநீர்த் தொட்டிக்குள் இரண்டு குரங்குகள் செத்து மிதக்கின்றன.
இதை அறியாது தினசரி சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனையில் இருக்கும் குடிநீர்த் தொட்டியிலிருந்து வரும் குடிநீரை அருந்தி தங்கள் தாகத்தைத் தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மருத்துவமனைக்கு வந்த சில நோயாளிகள் குடிநீரை அருந்தும் போது ஒருவித துர்நாற்றம் வீசியுள்ளது.
இதில் சந்தேகமடைந்த நோயாளிகள் குடிநீர்த் தொட்டியை சோதனை செய்தபோது இரண்டு குரங்குகள் குடிநீர் தொட்டிக்குள் செத்து மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து மருத்துவமனை அலுவலர்களின் இந்த அலட்சியப் போக்கால் செய்வது அறியாது நோயாளிகள் திகைத்த நின்றனர்.