திருநெல்வேலி: திருநெல்வேலியில் அலங்கார வளைவு முதல் குறுக்குத்துறை சாலை வரையிலான இணைப்பு சாலைக்கு தமிழறிஞர் நெல்லை கண்ணன் பெயர் சூட்டி மாநகராட்சி கூட்டத்தில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சியின் அவசர கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயர் பி. எம். சரவணன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே. ஆர். ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், தச்சநல்லூர் மண்டலத்திற்கு உள்பட்ட திருநெல்வேலி அலங்கார வளைவு முதல் குறுக்குத்துறை சாலை வரையிலான இணைப்பு சாலைக்கு தமிழறிஞர் நெல்லை கண்ணனின் பெயர் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்திலேயே இந்த தீர்மானம் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு சில மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அனைத்து மாவட்ட உறுப்பினர்களிடமும் விவாதம் நடத்தி கருத்து கேட்டு தீர்மானத்தை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவின் கீழ் சாலைக்கு நெல்லை கண்ணனின் பெயர் சூட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.