ராஜஸ்தான் கோடாவில் கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சி மையங்களின் நகரமான ராஜஸ்தானில் கோடாவில், மேலும் இரண்டு பயிற்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிகாரில் உள்ள சம்பரன் மாவட்டத்தில் வசித்துவந்த மிஸ்ரா, 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜேஇஇ தேர்வுக்கு தயாராவதற்காக கோட்டா பயிற்சி மையத்திற்கு கடந்த மார்ச் மாதம் வந்துள்ளார்.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில், மகாவீர் நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி பயிற்சி பெற்றுவந்தான் மிஸ்ரா. பெற்றோரின் தொலைபேசி அழைப்பை எடுக்காததால், அவரது பராமரிப்பாளர் விடுதி அறைக்கு வந்து பார்த்தபோது மாணவன் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார்.
இதனிடையே, உ.பி.யின் ராம்பூரில் வசித்துவந்த மஞ்சோத் சாப்ரா ராஜஸ்தானின் கோடாவில் உள்ள விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
புதன்கிழமை இரவு 17 வயது மாணவன் தான் தங்கியிருந்த விடுதியறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான்.
மாணவன் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. ஆகவே, கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 15 பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
மருத்துவம், பொறியியல் போன்ற நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்பதற்காக சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் பல்வேறு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்களின் தற்கொலைக்கு பெரும்பாலும் மனஅழுத்தமே காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.