மக்களவையில் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது திமுக எம்பி டி.ஆர். பாலு உரையாற்றினார்.
மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் இன்று காலை முதல் விவாதம் நடைபெற்று வருகின்றது.
இந்த விவாதத்தில் திமுகவின் டி.ஆர்.பாலு பேசியது:
“நாடாளுமன்றத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளோம்.
கச்ச எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ஏன் குறைக்கவில்லை.
160 ஆண்டு கனவுத் திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை பாஜக அரசு கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
ரூ. 15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மத்திய அரசால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 2,000 கோடி ஒதுக்க முடியவில்லை.
இலங்கை அரசிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
ரூ. 15 லட்சம் அனைவருக்கும் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால். ரூ. 15 கூட தரவில்லை.
சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தவறிவிட்டது.” என்று தெரிவித்தார்.