ஆதிக்க சக்தியால் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான இந்த உண்ணாவிரத போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தொடக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய துரைமுருகன்,
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்பை நீட் தேர்வு பறித்துள்ளது. ஆதிக்க சக்தியால் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல், கல்வியாளர்களும் நீட் தேர்வு ரத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஹிந்தி திணிப்பை எதிர்த்து உயிர்விட்டவர்களின் சாபத்தால் அந்த ஆட்சி ஒழிந்தது. இதேபோன்று நீட் தேர்வை திணிக்கும் ஆட்சியும் ஒழிந்துவிடும்
மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்களின் போராட்டத்தில் பங்கேற்றுள்ளேன். கலைஞர் கருணாநிதி, மு.க. ஸ்டாலினுடன் போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன். தற்போது உதயநிதி பங்கேற்றுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டு பேசி வருகிறேன். வரும்காலத்தில் தலைவராகும் தகுதி உதயநிதிக்கு உள்ளது எனக் குறிப்பிட்டார்.