நெய்வேலி: கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயம் அடைந்தனர்.
வேப்பூர் வட்டம், ரெட்டாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(45), இவரது மனைவி உமா(40), தங்கராசு(70), இவரது மனைவி லட்சுமி(60). இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் அடரியில் திங்கள்கிழமை நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஆட்டோவில் வீடு திரும்பினர். ஆட்டோவை ராஜா ஓட்டினார். இந்த ஆட்டோவில் ரெட்டாகுறிச்சி காலனியில் வசித்து வந்த சண்ணான் மகன் முனியனும் சென்றார்.
இவர்கள், சேலம்-விருத்தாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிராங்குளம் கைகாட்டி அருகே சென்றபோது, கும்பகோணத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார், ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற முனியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜா, உமா, தங்கராசு, லட்சுமி ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முனியன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் . காரில் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.