மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் தீப்பற்றி எரிந்த விபத்தில், உயிர் தப்பியவர்களை விமானத்தில் அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டு தனி விமானம் மூலம் சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. இதற்காக உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டது.
இந்திய ரயில்வே துறையின் சிறப்பு சுற்றுலா திட்டத்தின் கீழ் பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு தனி ரயில் பெட்டி ஒதுக்கீடு செய்துதரப்படுகிறது. இதில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள பகுதியைச் சேர்ந்த 64 பேர் தனி ரயில் பெட்டியில் பயணித்துள்ளனர்.
கடந்த 17ஆம் தேதி பயணத்தைத் தொடங்கிய இவர்கள், கன்னியாகுமரியிலிருந்து மதுரை வந்துள்ளனர். புனலூர் - மதுரை விரைவு ரயிலில் இந்த சுற்றுலா பயணிகள் வந்த பெட்டி இணைக்கப்பட்டது.
சனிக்கிழமை அதிகாலை 3.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றது. ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பெட்டி அதிகாலை 5 மணியளவில் தீப்பற்றி எரிந்தது.
ரயில் பெட்டிக்குள் சிலிண்டர், அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு, விறகு உள்ளிட்டவை இருந்ததும், சுற்றுலா பயணிகளுக்கு சமையல் செய்து கொடுக்க தனியாக மூன்று சமையல்காரர்களும் உடன் அழைத்து வந்திருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சமையல் செய்தபோது, சிலிண்டர் வெடித்து தீப்பிடித்துள்ளது. மேலும், ரயிலின் பெட்டிகளை அவர்கள் பூட்டியிருந்ததால் உடனடியாக வெளியே தப்பியோடவும் முடியாமல், 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர்த்தப்பியவர்கள் தனி விமானம் மூலம் உத்தரப் பிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.