சுகாதார நிலையங்களில் நாய்க்கடி, பாம்புக்கடி மருந்து இருப்பு அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
திசையன்விளை: அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடி, பாம்புக்கடி மருந்து கையிருப்பு உள்ளதை பொதுமக்கள் அறிந்து தேவைக்கேற்ப பயன்படுத்தும் வகையில் அதற்குரிய மருந்து இருப்பு தொடா்பான அறிவிப்பு பலகைகள் வைக்குமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தீடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, சரியான நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவா்கள் மற்றும் மருந்தாளுநர்கள், பணியாளா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க துணை இயக்குநர், சுகாதார பணிகள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டாா்.
பின்னா் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்து பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படாததை பார்த்த அமைச்சர், அங்கிருந்த செவிலியரிடம் விசாரித்த போது அந்த வாகனத்தின் ஓட்டுநர் பணிக்கு வராததையும், மருந்துகள் பாதுகாப்பின்றி இருப்பதை கண்டித்த அமைச்சா், அலட்சியமாக செயல்பட்ட வாகன ஓட்டுந மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி மற்றும் பாம்புகடி மருந்துகள் கையிருப்பு உள்ளதை பொதுமக்கள் அறிந்து தேவைக்கேற்ப பயன்படுத்தும் வகையில் அதற்குரிய மருந்து இருப்பு தொடா்பான அறிவிப்பு பலகைகள் வைக்குமாறு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநருக்கு அறிவுறுத்தினாா்.