சென்னை: நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2024, மக்களவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாக பெரிதும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கா் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் இருந்து வருகின்றன.
இதையும் படிக்க | 4 மாநில தேர்தல் முடிவுகள்: வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி
மும்முனைப் போட்டி நிலவிய தென் மாநிலமான தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்)கட்சியை அகற்றி அரியணையில் ஏறுகிறது காங்கிரஸ்.
இந்த நிலையில், நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு எனது வாழ்த்துகள்.
அவர்களது ஆட்சிக்காலம் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் நல்ல மாற்றத்தையும், வளர்ச்சியையும் வளத்தையும்
அளிப்பதாக அமைய விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.