திருநெல்வேலி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக திருநெல்வேலி தாமிரவருணியில் இருந்து புனிதநீர் சேகரிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்ஒரு பகுதியாக நாட்டில் உள்ள பல்வேறு நதிகளில் இருந்து புனிதநீர் சேகரித்து கொண்டு செல்லப்படுகிறது.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தென்பொதிகையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரவருணியில் இருந்து புனிதநீர் சேகரித்து கொண்டு செல்லப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் தாமிரவருணி தீர்த்தக் கட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதையும் படிக்க: நாளை தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்
தாமிரவருணி நதியில் பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட சிறப்பு பூஜை பொருள்கள் கலந்து வழிபாடு செய்யப்பட்டது. மஹா தீபாராதனைக்குப் பின்பு ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்துடன் புனிதநீர் சேகரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது.