சென்னை: கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சென்னை விமான நிலையம் செவ்வாய்க்கிழமை(டிச.5) காலை 9 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 100 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் ஞாயிறு இரவுமுதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, மீனம்பாக்கத்தில் 100 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சென்னை விமான நிலையம் இன்று இரவு வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மோசமான வானிலை தொடர்வதால் நாளை காலை 9 வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலைய ஒடுபாதையில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.