செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விநாடிக்கு 6000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகின்றது.
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான 24 அடியில், 21 அடியை கடந்ததால் ஏரியிலிருந்து விநாடிக்கு 3,162 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஏரியின் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீரின் வரத்து அதிகரித்து தற்போது விநாடிக்கு 10,000 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை விநாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் 278 ஏரிகள் நிரம்பியுள்ளதாகவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 177 ஏரிகள் முழுகொள்ளவை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.