விக்கிரவாண்டி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ராஜபாளையம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பலியானார் மற்றும் இருவர் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் சென்னை மழை, வெள்ள மீட்புப் பணிகளுக்காக சென்ற நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். காயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் என்.கே. நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் ஜெயபால் மூர்த்தி(50). விருதுநகரைச் சேர்ந்தவர் ரா.பழனிகுரு(54). இருவரும் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தனர்.
தமிழக முதல்வர் உத்தரவைத் தொடர்ந்து மிக்ஜம் புயல் மழை மீட்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை இவர்கள் இருவரும் ராஜபாளையத்திலிருந்து சென்னைக்கு காரில் சென்றுக்கொண்டிருந்தனர். ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் முருகானந்தம்(41) காரை ஓட்டினார்.
திருச்சி - சென்னை தேசியநெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையும் படிக்க: புதுகையில் பட்டாசு தயாரிப்புக் கூடத்தில் விபத்து!
இதில் துப்புரவு ஆய்வாளர் ஜெயபால்மூர்த்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். துப்புரவு ஆய்வாளர் பழனி குரு, கார் ஓட்டுநர் ஆகியோரை காவல் துறையினர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.