சென்னை: மிக்ஜம் புயல் நிவாரண நிதியை ரொக்கமாக வழங்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்கினால் அதிக முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகவும், வங்கிக் கணக்கில் செலுத்தினால் பிரச்னை இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த 3-ஆம் தேதி இரவுமுதல் இரண்டு நாள்கள் இடைவிடாமல் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது குறிப்பிடத்தக்கது.