சென்னை: நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து மர்மப் பொருள் வீச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் புதன்கிழமை வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், மக்களவையின் பார்வையாளர்கள் மடத்தில் அமர்ந்திருந்த இருவர் திடீரென பகல் 1.12 மணியளவில் அவைக்குள் குதித்தனர்.அவர்கள் சர்வாதிகாரம் ஒழிக என்று கோஷம் எழுப்பியவாறு,மர்மப் பொருளை வீசினர்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்டு மக்களவை உறுப்பினர்கள் துரிதமாக செயல்பட்டு, அவர்கள் இரண்டு பேரையும் மடக்கிப் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையும் படிக்க | ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் நடந்த சம்பவம்...
எடப்பாடி பழனிசாமி கண்டம்
நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது எடப்பாடி கே.பழனிசாமி கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில். கடந்த 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு நாளான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது.
இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.