சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை மழை பெய்யும்; ஆனால் அதைப் பற்றி பயப்பட வேண்டாம் என்றும், மிதமான மழையாக இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும், டிச. 18 முதல் 22 வரை பெய்யும் மழையானது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பாதிப்பு இருக்காது. ஆனால், தென் தமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் அதிகளவு மழைக்கு வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, டிச. 14, 15ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிச.16ல் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.