சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் உள்ள குழந்தைகளை நடிகை அனுஷா பிரதாப் நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்டுள்ளார்.
வாழ்க்கை எல்லோருக்கும் எளிதானதாக இல்லை என்பதை வெளி உலகத்தைப் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும் எனவும் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகிவரும் ஆனந்தராகம் தொடரில் நாயகியாக நடித்துவருபவர் நடிகை அனுஷா பிரதாப்.
அனுஷா பிரதாப்புக்கு ஜோடியாக அழகு சுந்தரம் நடித்து வருகிறார். இந்த ஜோடியின் நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்தத் தொடரில் பல சாகச சண்டைக் காட்சிகளில் அனுஷா நடிப்பதால், அவருக்கு சின்னத்திரை அதிரடி நாயகி என்ற பெயரும் ரசிகர்கள் மத்தியில் உண்டு.
படப்பிடிப்பு நேரம் போக எஞ்சிய நேரங்களில் வாசிப்பது, பயணம் செல்வது போன்ற செயல்களில் நடிகை அனுஷா தன்னை ஈடுபடுத்திக்கொள்வது வழக்கம்.
அந்தவகையில் தற்போது சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் உள்ள குழந்தைகளை நேரில் சென்று சந்தித்து, அவர்களுடன் நேரத்தை செலவிட்டுள்ளார்.
ஓய்வுக்காக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் நடிகைகளுக்கு மத்தியில், ஓய்வு நேரத்தில் புற்றுநோய் மையத்துக்கு அனுஷா சென்றுள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு காப்பகத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார்.
தற்போது புற்றுநோய் மையத்தில் உள்ள குழந்தைகள் குறித்து பதிவிட்டுள்ள அனுஷா, வாழ்க்கை எல்லோருக்கும் எளிதானது அல்ல. சில நேரங்களில் வெளியே உள்ள சவால்கள் நமக்குத் தெரிவதில்லை. ஆனால், தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனும் உள்ளூர பல சவால்களை சந்தித்தவர்கள்தான். உங்களுக்கான அனைத்தையும் பிறருக்கு கொடுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.