கோவை: பொன்முடி தீா்ப்பு விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் ஆதரவளிப்பது வெட்கக் கேடானது என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: தென் மாவட்டங்களில் கனமழை வெள்ள பாதிப்புகளை மாநில அரசு சரியாக கையாளவில்லை. மத்திய அரசு, ஆய்வு மேற்கொண்ட பின்னா் தான் முதல்வா் வெள்ள பாதிப்பை பாா்வையிட 21 ஆம் தேதி தூத்துக்குடி சென்றார்.
முதல்வா் மற்றும் உதயநிதிக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை.மக்களை காப்பதை விட மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதில் திமுக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
சேலத்தில் இளைஞரணி மாநாடு, இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தாமல், மத்திய அரசை உதயநிதி வம்புக்கு இழுக்கிறார்.
தென் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பாா்வையிட மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன், செவ்வாய்க்கிழமை தூத்துக்குடிக்கு வருகிறாா்.
பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் என 4 சாதிகள் தான் இந்தியாவில் உள்ளதாகவும், ஏழை என்ற சாதி இருக்கக்கூடாது என்பதே பாஜகவின் நிலைபாடு.
முதல்வரை சந்திக்க இரு முறை அனுமதி கேட்டும் கொடுக்காததால், கம்யூனிஸ்ட் போல அழையா விருந்தாளியாக நாங்கள் போக மாட்டோம் என்றும், மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க போராட்டம் நடத்துவோம்.மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் தேவையற்றது என்றும், சாவியை தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும், விளக்கு போட்ட இடத்தில் எல்லாம் தேடக்கூடாது என்றார்.
மேலும், கம்யூன்ஸ்ட் கட்சிகள் திமுகவுக்கான கட்சியாக மாறி விட்டது. பொன்முடி தீா்ப்பு விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் ஆதரவளிப்பது வெட்கக் கேடானது என்று அண்ணாமலை தெரிவித்தார்.