போண்டா மணி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்: விஜயகாந்த்

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவுக்கு  தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவுக்கு  தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் நண்பர் களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே விஜயகாந்த் சார்பில் மறைந்த நடிகர் போண்டா மணி மனைவியிடம் நடிகர் மீசை ராஜேந்திரன், சாரபாம்பு சுப்புராஜ், அனகை முருகேசன் ஆகியோர் உதவித்தொகை கொடுத்து ஆறுதல் கூறினர். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான போண்டா மணி  உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

சென்னையில் அவரது வீட்டில் மயங்கி விழுந்தவரை உடனடியாக மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். நீண்ட நாள்களாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். 60 வயதான போண்டா மணி, 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் நடிகர் வடிவேலு நடித்த படங்களில் துணை நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்.

வின்னர், ஏய், வசீகரா, பிறகு ஆகிய படங்களில் போண்டா மணியின் நகைச்சுவை பெரிதாக ரசிக்கப்பட்டது. குறிப்பாக, ‘அடிச்சுகூட கேப்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க’ என்கிற இவரது வசனம் மிகப் பிரபலம்.  போண்டா மணியின் இயற்பெயர் கேதீஸ்வரன். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com