சென்னை: மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு,ரசிகர்கள், தொண்டனர்கள் மற்றும் திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தீவுத்திடல் மைதானத்தை அடையவும், தங்கள் வாகனங்களை நிறுத்தவும் போதுமான பாதுகாப்பு மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த, அதிகாலையிலேயே ஆயிரக் கணக்கான மக்கள் குவிந்து வருவதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | விஜயகாந்த் உடலைக் கண்டு அழுத விஜய்: நேரில் சென்று அஞ்சலி!
அதன் விவரம் வருமாறு:
சென்னை தீவுத்திடலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் காமராஜர் சாலையில் இருந்தும் மன்றோ சிலை மற்றும் சென்ட்ரல் வழியாகவும் தீவுத்திடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீவுத்திடல் மைதானம், ஈ.வி.ஆர். சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, வடபழனியில் இருந்து திருமங்கலம் வரையிலான 100 அடி சாலை ஆகிய முக்கிய பகுதிகளுக்குள் வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், போர் நினைவுச் சின்னம், தீவுத்திடல் மைதானத்தின் இடதுபுற நுழைவு வழியாக அண்ணாசாலை செல்லும் சாலையில் அனுமதிக்கப்படும்.
பிற மூத்த கலைஞர்கள்,பல்லவன் முனை, வாலஜா முனை(அண்ணாசாலை, கொடிப்பணியாளர் சாலை சந்திப்பு) வரை அனுமதிக்கப்படுவார்கள்.
இதையும் படிக்க | உடல்நல பாதிப்பால் விஜயகாந்த் எதிா்கொண்ட 5 ஆண்டுகள்
தீவுத்திடல் மைதானம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி வாகனங்கள், கனரக வாகனங்கள்(போக்குவரத்து பேருந்துகள், மேக்சிகேப்கள்) அண்ணா சிலைக்கு அனுமதிக்கப்படும். மேலும் கட்சிக் குழுவினர் கடற்கரை சாலை வாகன நிறுத்துமிடத்திற்கு திருப்பி விடப்படுவார்கள்.
அனைத்து இலகுரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், தன்னார்வ வாகனங்கள் பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை, எம்எல்ஏ விடுதி சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.