திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியன் பிரதிஷ்டை செய்தது தை உத்திர நட்சத்திரத்தில் ஆகும். எனவே ஆண்டுதோறும் தை மாத உத்திர நட்சத்திரத்ன்று இத்திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
நிகழாண்டில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. காலை 9.20 மணிக்கு மூலவர், சண்முகர், வெங்கடாசலபதி, வள்ளி, தெய்வானை விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின் மூலவர் மற்றும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல், புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
பக்தர்கள் வழங்கிய மலர்களால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இரவில் குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.