2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

இன்று ஒரு முக்கியமான நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

அண்ணாவினுடைய மறைவிற்குப் பிறகு 1969ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

News image
Updated On :10 பிப்ரவரி 2023, 11:19 am

DIN


சென்னை: இன்று ஒரு சிறப்பான நாள் என்றும், அண்ணாவினுடைய மறைவிற்குப் பிறகு 1969ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து முதல்வர் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, லலித்கலா அகடாமியில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்து ஆற்றிய உரையில், இந்த நாள் ஒரு சிறப்பான நாள். அந்த சிறப்பான நாளில்தான் இன்றைக்கு இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. என்ன நாள் என்று கேட்டால் பேரறிஞர் அண்ணாவினுடைய மறைவிற்குப் பிறகு 1969ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாள். அந்த நாளில் இந்த புகைப்படக் கண்காட்சி தொடங்கப்படுவது பொருத்தமாக அமைந்திருக்கிறது. காரணம், கருணாநிதிக்கும் பத்திரிகைக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பலமுறை சொல்லியிருக்கிறார், என்னுடைய மூத்த பிள்ளை யார் என்று கேட்டீர்களானால் முரசொலி தான் என்று பத்திரிகையைத்தான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் கருணாநிதி. அப்படிப்பட்ட நிலையில் இருக்கக்கூடியவர் தலைவர் அவர்.

செய்திகளை படித்து அறிந்து கொள்வதைவிட, புகைப்படத்தை பார்த்தாலே பல செய்திகளை அறிந்துகொள்ளக்கூடிய நிலை இன்றைக்கு இருக்கிறது. ஆகவேதான், புகைப்படத்தை பார்த்தவுடனே பல்வேறு வரலாற்று நிகழ்ச்சிகளை தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பேனாவிற்கு எப்படி சக்தி இருக்கிறதோ அதுமாதிரி புகைப்படத்திற்கும் சக்தி இருக்கிறது.  நான் சொல்கிற பேனா எந்தப் பேனா என்று உங்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட நிலையில்,  பேனாவிற்கும் புகைப்படத்திற்கும் பல தொடர்புகள் உண்டு, பல சக்திகள் உண்டு. அந்த வகையில் ஒரு சக்தி வாய்ந்த நிலையிலேதான் அந்தப் புகைப்படங்களையெல்லாம் பார்க்கிறபோது அது உயிரோட்டமாகவே இருக்கிறது.  நடந்த சம்பவங்களை அப்படியே எடுத்து வெளியிடக்கூடிய நிலையில் அதைப் பார்த்தவுடனே, என்ன நடந்திருக்கிறது? என்ன செய்தி அது? என்ன சம்பவம் எது? எப்படிப்பட்ட நிலையில் நடந்திருக்கிறது? என்பதை மிகவும் சுலபமாக புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அந்த புகைப்படங்களை எடுப்பது என்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்று.

இன்றைக்கு இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை எல்லாம் நான் பார்த்தேன்.  உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.  

அதே நேரத்தில் இந்த சங்கத்தின் சார்பில், வீட்டுமனை குறித்து ஒரு கோரிக்கையை என்னிடத்தில் வைத்திருக்கிறார்கள். அந்தக் கோரிக்கை எல்லா நிலையிலும், முடிவடைந்து வெளியிடப்படக்கூடிய நிலையில் இருக்கிறது. எனவே நீங்கள் உடனடியாக முடித்து தர வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக, உறுதியாக இந்த ஆட்சியைப் பொறுத்தவரைக்கும், சொன்னதை மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சி என்பது உங்களுக்குத் தெரியும். ஏற்கனவே, இந்த ஆட்சி வந்த பிறகுதான் பத்திரிகை நல வாரியம் என்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். நிச்சயமாக உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும், அவற்றை உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கையை நிச்சயமாக நாங்கள் எடுப்போம் என்ற அந்த நம்பிக்கையை, உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, இந்தச் சிறப்பான பணியில் ஈடுபட்டதில் வெற்றி கண்டிருக்கக்கூடிய இந்த அமைப்பைச் சார்ந்திருக்கக்கூடிய நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.