காயப்பட்ட பாம்புக்கு சிகிச்சைஅளிப்பதற்காக சீர்காழி கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயில் பகுதியை சேர்ந்த கிருத்திகா என்பவரது வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. குளியலறை கட்டுமான பணியின் போது, அங்கு ஆறடி நீள கருநாகப் பாம்பு இருப்பதைக் கண்டு வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடி நபர் பாண்டியனுக்கு தகவல் அளித்தார். தகவலின் படி அங்கு சென்ற பாண்டியன் வீட்டில் பதுங்கியிருந்த பாம்பினை லாவகமாக மீட்டு எடுத்தார். அப்போது பாம்புக்கு கடப்பாரை பட்டு காயம் ஏற்பட்டதைக் கண்ட பாண்டியன், பாம்பிற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார்.
அதன்படி சீர்காழி வனத்துறை அனுமதியுடன் கால்நடை மருத்துவமனைக்கு பாம்பினை எடுத்துச் சென்று அங்கு பணியில் இருந்த மருத்துவ உதவியாளரிடம் சிகிச்சை அளிக்க வலியுறுத்தியதைத் தொடர்ந்து, வனத்துறை அலுவலர் செல்லதுரை மேற்பார்வையில் உதவியாளர் ராஜா அடிபட்ட பாம்பிற்கு மருந்து தேய்த்து சிகிச்சை அளித்தார்.
பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்ட பாம்பை பாண்டியன் ஒரு டப்பாவில் வைத்து அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றார்.
இதையும் படிக்க: ‘ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும்’: மத்திய அமைச்சர்
கால்நடை மருத்துவமனைக்கு பாம்புக்கு சிகிச்சை அளிக்க பாம்பை எடுத்து வந்ததை பார்த்த , மருத்துவமனைக்கு வந்திருந்த மற்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, மிரட்சியுடன் பாம்புக்கு சிகிச்சை அளிப்பதை பார்த்துச் சென்றனர்.