ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட வீரப்பன்சத்திரத்தில் நாம் தமிழர் - திமுக கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இறுதி கட்டப் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக தொண்டர்கள் பிரச்னையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த 20-ஆம் தேதி அனுமதியினறி ஆலமரத் தெருவில் பிரசாரம் மேற்கொண்ட குற்றச்சாட்டில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஈரோடு காவல் நிலையத்தில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா உள்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட வீரப்பன் சத்திரத்தில் நாம் தமிழர் மற்றும் திமுக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் சேதமடைந்தன. சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல் துறையினர், துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.