சென்னை: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 2க்கான முதன்மை எழுத்துத் தேர்வு கால தாமதமாகத் தொடங்கியது ஏன் என்பது குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் குரூப் 2 பிரதான தோ்வு இன்று நடைபெற்றது. இந்தத் தோ்வை சுமார் 55 ஆயிரம் போ் எழுதினர். மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, பிரதான தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடா்பான தோ்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வுகள் பதிவெண் வரிசைகளில் இருந்த குளறுபடிகள காரணமாக தாமதமாகவே தொடங்கி நடைபெற்றன.
இதையும் படிக்க.. 3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவைசிகிச்சையா? அதிரும் விஞ்ஞானிகள்
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 280 தோ்வுக் கூடங்களில் தோ்வுகள் நடைபெற்றன. இந்த நிலையில், தேர்வுகள் தாமதமாகத் தொடங்கியது ஏன் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
அதாவது, வருகைப்பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலை வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதையும் படிக்க.. குறைந்த கட்டணத்தில் புதுச்சேரிக்கு விமானத்தில் பறக்க தயாராகுங்கள்!
இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று முடிந்ததுடன், பிற்பகல் தேர்வு நேரம், 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் வகையில் மறுவரையறை செய்யப்பட்டது.
அதன்படி, பிற்பகலில் தேர்வானது துவங்கப்பட்டு, தேர்வு மையங்களில் சீராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.