மணப்பாறை அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த அரசு நகர பேருந்து மீது சாலையை கடந்து சென்ற காட்டெருமை கூட்டம் மோதியதில் பேருந்து முன் பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து, திண்டுக்கல் மாவட்டம் நத்ததிற்கு அரசு நகர பேருந்து ஒன்று சுமார் 25 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. பேருந்து துவரங்குறிச்சிக்கு அடுத்த அக்கியம்பட்டி – லிங்கம்பட்டிக்கு இடையே சென்றபோது அவ்வழியாக வனப்பகுதியிலிருந்து விளைநிலங்களுக்குள் இறங்கிய 20 மாடுகள் கொண்ட காட்டெருமைகள் கூட்டம் சாலையை கடந்துள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் 3 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
காட்டெருமைகளை கண்டதும் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். இருப்பினும் பேருந்தை கண்டு அச்சமடைந்த இரு காட்டெருமைகள் அரசுப் பேருந்தினை முட்டி மோதியதில் பேருந்தின் முன் பக்கம் கண்ணாடி உடைந்தது. மேலும், பேருந்தில் முன்பகுதியும் சேதமடைந்தது. இதில் ஒரு காட்டெருமையும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து காட்டெருமைகள் அருகிலுள்ள விளைநிலத்திற்குள் இறங்கி அங்கேயே சிறிது நேரம் நின்றுள்ளது. இதனால் பேருந்து பயணிகள் பீதியடைந்தனர். பின் காட்டெருமைகள் கூட்டம் அங்கிருந்து சென்றது.
அதனைத்தொடர்ந்து பேருந்தின் நடத்துநர் அளித்த தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற துவரங்குறிச்சி வனச்சரக வனத்துறையினர், நத்தம் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.