ஈரோடு கிழக்கில் எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என அதிமுக வேட்பாளர் தென்னரசு தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடைமையை செலுத்தி வருகின்றனர்.
238 வாக்குச்சாவடிகளிலும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க | பழுதடைந்த 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்: ஆட்சியர் தகவல்
காலை 9 மணி நிலவரப்படி 10.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆண்கள் 12,967 பேரும், பெண்கள் 10.294 பேரும் வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் கல்லுபிள்ளையார்கோயில் வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்குப் பதிவு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கில் எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் தங்களது ஜனநாயக கடமையை வரிசையில் நின்று விறுவிறுப்பாக செலுத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு மை வைப்பதில் ஒரு சில இடங்களில் தவறு நடக்கலாம். அது குறித்து கட்சி தலைமையில் இருந்து அறிக்கை வரும். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாக எனக்கு தகவல் இல்லை என்று தென்னரசு கூறினார்.