காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆருத்ரா வழிபாடாக நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் 10 நாள் நிகழ்ச்சியாக ஆருத்ரா உற்சவம் நடைபெற்று வந்தது. 9-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு ஸ்ரீ பிரணாம்பிகை - ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் பொன்னூஞ்சல் வழிபாடு நடைபெற்றது. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சத்சபேஸ்வரருக்கான (நடராஜர்) சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை விக்னேஸ்வர பூஜை தொடங்கி புன்னியாகவாஜனம், கும்ப பூஜையுடன் கூடிய யாக பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு 16 வகையான திரவியங்களுடன் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணியளவில் கோபூஜை நடத்தப்பட்டது. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சுவாமிக்கு சதுர்வேதம், ஆசீர்வாதம், தேவாரம் பாடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. 11 மணியளவில் கோபுர வாசல் தீபாராதனையுடன் 4 மாட வீதியுலாவுக்கு சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. வீதியுலா நிறைவில் சுவாமிகள் பிரம்ம தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தீர்த்தவாரி நிறைவடைந்து கோயிலுக்கு வரும் சுவாமிக்கு ஊடல் உற்சவம் நடத்தப்படுகிறது. தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.