தமிழ்நாட்டை எவ்வாறு அழைப்பதென ஆளுநர் சொல்லித்தர வேண்டாம்: கே.எஸ்.அழகிரி

தமிழ்நாட்டை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் சொல்லித்தர வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
தமிழ்நாட்டை எவ்வாறு அழைப்பதென ஆளுநர் சொல்லித்தர வேண்டாம்: கே.எஸ்.அழகிரி

வேலூர்: தமிழ்நாட்டை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் சொல்லித்தர வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை நினைவுகூரும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை கல்வெட்டுகளை திறந்து வைத்தும், காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக, வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் மாநில அளவிலான பாரா வாலிபால் போட்டிகளை அவர் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என கூறுகிறார். தமிழ்நாட்டை எவ்வாறு அழைக்க வேண்டும் என ஆளுநர் சொல்லித்தர வேண்டாம். மேலும், தமிழகம் என்பதும், தமிழ்நாடு என்பதும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ்நாடு என்பது தான் நமது நாடு. இதேபோல், தமிழ்நாடு, ஆந்திர நாடு என பல மாநிலங்கள் சேர்ந்ததுதான் இந்தியா ஆகும்.

இந்தியா என்ற ஒரு நாடு இல்லை. இந்தியா ஒரு தேசம். நாடு என்பது வேறு, தேசம் என்பது வேறு. நாடுகளுடைய கூட்டமைப்புதான் தேசம் என நாம் சொல்லுகிறோம். அனைவரும் சேர்ந்ததுதான் இந்தியா. இதனால்தான் இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என மகாத்மா காந்தி குறிப்பிட்டார். இவையெல்லாம் ஆளுநருக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை. ஆளுநர் கூறிவிட்டார் என்பதற்காக நாம் கொதிப்படையவும் வேண்டாம். நாம் கொதிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்த ஆளுநர் அனுப்பப்பட்டுள்ளார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்துக்களின் திருவிழாக்களுக்கு முதல்வர் வாழ்த்து சொல்வாரா என பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழர் திருநாள் என்று சொல்லக்கூடிய பொங்கல் தமிழர் பண்டிகை மட்டுமின்றி இந்துக்களின் பண்டிகையும் தானே. அதற்கும்தான் வாழ்த்து சொல்கிறோம். ஆனால், பாஜகவினர் தான் தமிழர் பண்டிகையை பொங்கல் பண்டிகையாக கருதவில்லை போலும். பொங்கல் என்பது இந்து கலாசாரத்தில் இருந்து வந்தது தான். இது ஒன்றும் வெளிநாட்டு கலாசாரத்தில் இருந்து வந்ததல்ல. ஆனால், தமிழகத்தில் உள்ள பாஜகவினர் தமிழ் கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறு கலாசாரத்தில் உள்ளனர். அவர்கள் கலாசார வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும்.

ராகுல்காந்தி, கமல்ஹாசன் சந்திப்பு வரவேற்கக்கூடிய ஒன்று. கமல்ஹாசன் தேசிய உணர்வுடைய தலைவர், நல்ல மனம் படைத்தவர். சீர்திருத்த கருத்துகளைக் கொண்டனர். அவர் இன்றைய நிலையில் ராகுல்காந்தி போன்ற தலைவர்தான் இந்தியா போன்ற தேசத்திற்கு தலைமை ஏற்க முடியும் என உறுதியாக நம்புகிறார். அதனுடைய வெளிப்பாடுதான் ராகுல்காந்தியுடன் நடைபயணம் செய்தும், கருத்து பரிமாற்றம் செய்ததாகும். ராகுல் காந்தி கமல்ஹாசன் சந்திப்பை தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது என்றார்.

அப்போது, கட்சியின் மாநில பொதுச்செயலர் தளபதி பாஸ்கர், வேலூர் மத்திய மாவட்டத் தலைவர் கு.சுரேஷ்குமார், மாநகர் மாவட்ட தலைவர் டீக்காராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com