சிலர் தூண்டுதலின் பெயரால் செவிலியர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை எழும்பூரில் காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பெருநகரங்களில் மட்டுமே பணியாற்றிய செவிலியர்களுக்கு சொந்த ஊர்களில் பணியாற்ற வாய்ப்புள்ளது. 2,300 ஒப்பந்த செவிலியர்களை பணியில் அமர்த்த அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செவிலியர்கள் 14 ஆயிரம் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில், தற்போது ரூ.19 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
போராட்டத்தில் ஈடுபடும் தற்காலிக செவிலியர் பிரதிநிதிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதற்கு முன்பாக ஒப்பந்த செவிலியர்களின் தனிப்பட்ட கோப்புகளை சரிபார்க்கும் பணி நடைபெறும்.
செவிலியர்கள் விவகாரத்தில் சுமுக சூழலை ஏற்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. சிலர் தூண்டுதலால் செவிலியர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால், செவிலியர்களை திமுக அரசு காக்கும். பணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனக் குறிப்பிட்டார்.