ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுக வேட்பாளரால் மட்டுமே முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் திருமகன் ஈவெரா அண்மையில் மறைந்ததையடுத்து, இந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27-இல் இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
இத் தொகுதியில் கடந்த முறை அதிமுக கூட்டணி சாா்பில் தமாகா, அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், அதிமுக சாா்பில் மூத்த நிா்வாகிகள் டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, கோகுல இந்திரா, பென்ஜமின் ஆகியோா் ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் தமாகா தலைவா் ஜி.கே.வாசனைச் சந்தித்து இடைத்தோ்தல் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பின்னர், ஈரோடு கிழக்கில் தொகுதியில் கடந்த முறை தமாகா போட்டியிட்டது என்பது உண்மைதான். இருப்பினும், இந்தத் தோ்தல் வெற்றி, எதிா்கால வெற்றிக்கும் வழிகாண்பதாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் முடிவுகள் எடுப்போம் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடப் போகும் கட்சி எது என்ற கேள்வி எழுந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளரின் பெயரை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
இதையும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டி: ஜி.கே.வாசன் அறிவிப்பு
இந்நிலையில், கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற காரணத்தால், தற்போதைய இடைத் தோ்தலிலும் அந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, காங்கிரஸ் சாா்பில் போட்டியிடவுள்ள வேட்பாளா் யாா் என்பது குறித்து கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்து அறிவிக்கும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுக வேட்பாளரால் மட்டுமே முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும். இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்ற யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுக வேட்பாளரால் மட்டுமே முடியும் என்று ஜெயகுமார் கூறினார்.