ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை சந்தித்த இளங்கோவன், பிரசாரத்தில் பங்கேற்க முதல்வருக்கு அழைப்பு விடுத்திருந்தார். தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார்.
இதற்கிடையே, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற இளங்கோவன், கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
மேலும், இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கும் காங்கிரஸ் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் பங்கேற்று நடைப்பயணத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.