மக்கள் மனம் மாறி இருப்பதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக வேட்பாளரை அறிவித்தபின் தேர்தல் களம் வியக்கத்தக்க அளவில் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததையடுத்து அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஆளும் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே இந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இருந்தாலும் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கில் போட்டியிடுவதற்கு இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அதிமுக வேட்பாளரை அறிவித்தபின் தேர்தல் களம் வியக்கத்தக்க அளவில் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் பேசிய அவர், மக்கள் மனம் தற்போது மாறி இருப்பதாகவும், அதனால், இம்முறை நடக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.