பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பாபநாசம் அருகே மெலட்டூர் பகுதி வெண்ணுக்குடியைச் சேர்ந்தவர் தனபால் மகன் கோபி என்கிற இளங்கோ(31). இவர் அண்மைக் காலமாக அம்மாபேட்டை மேட்டுத் தெருவிலுள்ள தனது அத்தை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இவர் வெளியே சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் தனது அத்தை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது அம்மாபேட்டை முருகன் கோயில் அருகே இருள் சூழ்ந்த பகுதியில் வந்தவரை அடையாளம் தெரியாத நபர்களால் வழி மறிக்கப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த இளங்கோ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பூரணி, அம்மாபேட்டை காவல் நிலையத்தின் அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு சென்று இளங்கோவை அரிவாளால் வெட்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.