தூத்துக்குடி: பொது சிவில் சட்டமானது ஒரு மதத்திற்கு எதிரானது என மாயத்தோற்றத்தை சிலர் உருவாக்குகின்றனர் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள அரிகேசவநல்லூர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், கலந்து கொள்வதற்காக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு புதன்கிழமை காலை வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஆன்மிகத்தில் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாத ஒரு நம்பிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அது குறைவாக உள்ளது. தூத்துக்குடி எம்.பி (கனிமொழி) அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் கூடுதல் பேருந்துகளும், ரயில்களும் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால் பாரபட்சம் இல்லாமல் இருக்கும். அதுபோன்று இல்லாமல் ஒரு குறிப்பிட்ட விழாவுக்கு மட்டும் கூடுதல் ரயில் சேவைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வரே இந்து மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்வது கிடையாது. எனவே, பாரபட்சம் இல்லாத ஆன்மிக நிலைமை இருக்க வேண்டும். நமது ஆன்மிகம் உலகிற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள எலிகள் கஞ்சாவை தேடி போலீஸ் நிலையம் வருவதால், காவல் நிலையங்களில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள கஞ்சாவுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும், எலிகளை எப்படி திருத்துவது? எலிகளின் போதையை எப்படி தடுப்பது? என்ற ஒரு பெரிய பிரச்னை தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
பிரதமரின் வேண்டுகோளின்படி, ஓராண்டுக்கு ஒரு கோடி மரங்கள் நடவேண்டும். அதேப்போன்று நெகிழி இல்லா இந்தியாவை உருவாக்க வேண்டும்.
இதையும் படிக்க | விராலிமலை அருகே சாலை விபத்து: 4 பேர் பலி
பொது சிவில் சட்டம் என்பது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு சட்டம், இன்னொருவருக்கு ஒரு சட்டம், ஒரு மதத்தை சார்ந்தவர்க்கு எதிரான சட்டம் என்று இந்த சட்டம் குறித்து ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த பலர் முயற்சிக்கின்றார்கள்.
பொது சிவில் சட்டம் என்றால் பொதுவாக இருக்கின்ற ஒரு சட்டம். இது தவறாக முன்னிறுத்தப்படுகிறது என்றார்.
தொடர்ந்து விஜய் அரசியலுக்கு வருவாரா, மாமன்னன் திரைப்படம் ஆகியவை குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டே சென்றார் தமிழிசை சௌந்தரராஜன்.