அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த மோட்டார் பைக்கில் மோதியதில் இரண்டு வயது சிறுவன் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கல்லிடைக்குறிச்சி, அக்க சாலை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் இசக்கிராஜ் (30), தனது தாயார் அலங்காரி (எ) சரஸ்வதி (50), சகோதரி இசக்கியம்மாள் (எ) கார்த்திகா (25), சகோதரி மகன் சந்துரு (2) ஆகியோருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக பாபநாசத்திற்கு பைக்கில் சென்றுள்ளனர்.
பாபநாசம் சாலையில் கோடாரங்குளம் விலக்கு அருகே சென்றபோது எதிரில் வந்த டிப்பர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து இசக்கிராஜ் வந்த பைக் மீது மோதியது, இதில் அலங்காரி, இசக்கியம்மாள், சந்துரு ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இசக்கிராஜ் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸார் உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரியை ஓட்டிவந்த விக்கிரமசிங்கபுரம், பசுக்கிடை விளை, அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மயில் என்பவரின் மகன் அசோக் (33) காவல்நிலையத்தில் சரணடைந்தார்.