கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை: காரணம் என்ன?

கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயகுமார் மறைவுக்கு மன அழுத்தமே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. 
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை: காரணம் என்ன?


கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயகுமார் மறைவுக்கு மன அழுத்தமே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் கடந்த 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்று காவல் துறை பணியில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பின்னர், சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி கோவை சரக டிஐஜி ஆக பொறுப்பேற்றுக் கொண்டு பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை 6.45 மணிக்கு நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்துக்கு வந்தவர், தனது பாதுகாவலரிடம் துப்பாக்கியை வாங்கியவர் காலை 6.50 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அவரை சக போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை  பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு காரணம் என்ன? 

டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமையா அல்லது குடும்ப பிரச்னைதான் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில், மன அழுத்தம் காரணமாகவே முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகுமார், மன அழுத்தத்தால் கடந்த சில வாரங்களாக சரியாக தூங்கவில்லை என சக பணியாளர்களிடம் தெரிவித்ததாகவும், மன அழுத்தத்தை குறைக்க மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில் மன அழுத்தம் காரணமாகவே முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் கூறாய்வு முடிந்து வெள்ளிக்கிழமை மாலை விஜயகுமாரின் உடல் தேனியில் நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

பணிச்சுமை காரணம் இல்லை:
இந்த நிலையில் டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் இல்லை என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். 

பல்வேறு வழக்குகளை திறமையாகக் கையாண்டு குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் டிஐஜி விஜயகுமார் கைதேர்ந்தவர். இவரது மனைவி மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com