திருவாரூர்: திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், தற்போதைய நன்னிலம் சட்டபேரவை உறுப்பினருமான ஆர். காமராஜ், அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது பெயரிலும், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் நண்பர்களான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோருடன் கூட்டுசேர்ந்து மொத்தம் ரூ.58,44,38,252 அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக சொத்து சேர்த்ததாக திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கடந்தாண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகளால் 51 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு, திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் நண்பர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.