ஆம்பூர்: ஆம்பூர் அருகே பால் கொள்முதல் நிலையத்துக்கு அருகே வந்த 12 அடி நீள மலைப்பாம்பினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர் அருகே அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ளது சுட்டக்குண்டா. இந்த ஊரில் பால் கொள்முதல் செய்யும் நிலையத்தை புதன்கிழமை திறந்து , சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் வந்தனர். அப்போது கட்டடத்தின் அருகே சுமார் 12 அடி நீள மலைப் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு கூச்சலிட்டனர்.
உடனடியாக ஆம்பூர் வனச்சரகர் பாபுவிற்கு அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் மூர்த்தி, ராஜ்குமார் உள்ளிட்டோர் மலைப்பாம்பை அரை மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை சுட்டக்குண்டா அருகே உள்ள பழைய ராணுவ சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் விட்டனர்.