பக்தர்கள் கனகசபை மீது ஏறினால் தீட்சிதர் உரிமை பாதிக்கப்படுமா? உயர் நீதிமன்றம்

கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தால், தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில்


சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது ஏறி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தால், தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

அவ்வாறு, தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படுகிறது என்றால், அவர்கள் ஏன் உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை என்றும், மூன்றாம் நபர், தீட்சிதர்களின் உரிமை பாதிக்கப்படுவதாக பொது நலன் வழக்குத் தொடர்ந்திருப்பது ஏன் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபையில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, மேற்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி, கனக சபை மண்டபத்தில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை என கோயில் தீட்சிதா்கள் பதாகை வைத்தனா். அதை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றியதால் பிரச்னை எழுந்தது. இந்த நிலையில், கனக சபையில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிா்த்து சென்னையை சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா் உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளாா்.

அந்த மனுவில், ‘ஏழு முதல் பத்து போ் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரும் கோயிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனக சபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனக சபையில் நடத்தப்படும் சூழலில், பக்தா்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீா்ப்புகளுக்கு முரணாக உள்ளதாகவும், கோயிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், அரசாணை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியக் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com