கோவை: மகளிர் உரிமை திட்டத்தில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்படும் என்பதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த், நூலகம் திறப்பது நல்ல விஷயம், அது ஒரு அறிவு சார்ந்த விஷயம் என்பதால் வரவேற்கத்தக்க விஷயம். அனைத்து ஊர்களில் திறந்தாலும் நல்லது தான்.
மகளிர் உரிமை திட்டத்தைப் பொறுத்தவரை திமுக தேர்தலுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள், ஆனால் வெற்றி பெற்ற பிறகு தகுதியான பெண்களுக்கு மட்டும்தான் ரூ.1000 வழங்கப்படும் என்று கூறுவது கண்டனத்துக்குரியது. தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நல்ல அரசு. எனவே வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 கட்டாயம் வழங்க வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.
இதையும் படிக்க | கணவருடன் தகராறு: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை!
நான் தற்பொழுது என்னுடைய இளைய மகனின் அடுத்த படத்திற்கான பட பூஜையில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளேன். அவரது பட பூஜை பாலக்காட்டில் நடைபெறுகிறது. விஜய பிரபாகரனின் இசைக்கச்சேரி இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப்பெரிய அளவில் மும்பையில் நவம்பர் 25 ஆம் நடைபெற உள்ளது.
கேப்டன் விஜயகாந்த் நன்றாகவும் சிறப்பாகவும் இருக்கிறார். முக்கியமான நேரங்களில் தொண்டர்களை கட்டாயம் அவர் சந்திப்பார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரை நாடாளுமன்றத் தேர்தலுக்கான எங்களுடைய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் உட்கட்சி தேர்தல் முடிந்து விட்டது. அடுத்து செயற்குழு, பொதுக்குழுவுக்கான அறிவிப்பை விரைவில் தலைமை கழகம் அறிவிக்கும்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காக தமிழக முழுவதும் சுற்றுப்பயணம். அதற்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியா, இல்லையா என்பதை தலைவர் அறிவிப்பார்.
மக்கள் எந்தக் கூட்டணியை ஏற்று கொள்கிறார்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தியா முழுவதும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எண்ணினாலும் அந்த கட்சிகளுக்குள்ளேயே (பாஜக) பல்வேறு வேறுபாடுகள் உள்ளது. எனவே, இறுதியில் மக்கள் எந்த கூட்டணியை ஏற்றுக் கொள்கிறார்கள் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.