பரமத்தி வேலூர்: கரப்பாளையம் அருகே உள்ள கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இரு மகன்களுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரப்பாளையம் அருகே உள்ள வெட்டுக்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் தனசேகரன் (30). இவரது மனைவி சசிகலா (27). இவர்களுக்கு திவித்(6), தர்ஷன் (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனசேகரன் டெம்போ வேன் மற்றும் கார் ஆகியவற்றை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகிறார்.
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தனசேகரனும் சசிகலாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சசிகலா அருகில் உள்ள ஒரு கிணற்றில் தனது இரண்டு குழந்தைகளையும் தள்ளிவிட்டு அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும், சசிகலாவுக்கு திருமணம் ஆகி ஏழு ஆண்டுகளே ஆனதால் திருச்செங்கோடு கோட்டாட்சியர் (பொறுப்பு) ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நல்லூர் போலீசார் மூவரின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.